விமானப்பணிப்பெண்ணான கீதிகா சர்மா, கோபால் கண்டாவின் விமான நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தார். இந்நிறுவனம் 2009ம் ஆண்டு மூடப்பட்டவுடன் தனது இன்னொரு நிறுவனத்தில் வேலை வழங்குவதாக கூறினார்.
ஆனால் துபாய் சென்று மற்றொரு நிறுவனத்தில் கீதிகா பணியாற்றினார். அப்போது துபாய் நிறுவனத்திற்கு கோபால் கண்டா, கீதிகா நடத்தை சரியில்லாதவள் என தெரிவித்து அந்த வேலையை பறித்தார்.
இதனால் மனமுடைந்துபோன கீதிகா, மீண்டும் கோபால் கண்டாவின் சூப்பர் சானிக் என்ற நிறுவனத்தில் கடந்த ஆண்டு பணிக்கு சேர்ந்தார். இருப்பினும் தனக்கு இப்பணி பிடிக்க வில்லை என்று கூறிய கீதிகா ஒன்றரை மாதத்திற்கு முன்பு விலகினார்.
இந்நிலையில் மீண்டும் கீதிகாவை கோபால் கண்டா மிரட்டியதாகவும் அதன் காரணமாகவே கீதிகா தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் எழுதிய இரண்டு பக்க கடிதம் தெரிவிக்கின்றது.
அக்கடிதத்தில், கோபால் கண்டா ஒரு மோசடிக்காரன். பெண்களை தவறாக நினைப்பவன். எந்த தவறை செய்யவும் வெட்கமோ, கூச்சமோ படாதவன்.
என் பெற்றோர் ஏதுமறியா அப்பாவிகளாக இருந்தை அவர்கள் இருவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். இனிமேலும் அவர்களது கொடுமைகளை பொறுக்க என்னால் முடியாது. அவர்களது டார்ச்சரில் இருந்து தப்பிக்க இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று தனது கடிதத்தில் கீதிகா எழுதியுள்ளார்.
இதையடுத்து, இளம்பெண்ணை தற்கொலை செய்ய தூண்டியதாக அரியானா அமைச்சர் கோபால் கண்டா மீது இந்திய தண்டனை சட்டம் 306-வது பிரிவின் டெல்லி பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அமைச்சர் பதவியை கோபால் நேற்று இரவு ராஜினாமா செய்தார். வழக்கு விசாரணைக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்பதால் பதவி விலகியுள்ளேன்.
அறிவுள்ள பெண்ணான கீதிகா ஏன் இந்த முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை. எந்த ஊழியருடனும் நான் நேரடி தொடர்பு வைத்துக் கொண்டதில்லை. விசாரணையில் உண்மைகள் தெரியும் என்று அவர் கூறினார்.
ஆபீசில் வேலை இருப்பதாக கூறி இரவு நேரங்களிலும் கீதிகாவை கோபால் கண்டா அழைப்பார் என்றும் கண்ட இடத்தில் தொட்டு அநாகரிகமாக நடந்துகொள்கிறார் என்று தாய் அனுராதாவிடம் கீதிகா பல முறை சொல்லி அழுதிருக்கிறார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
கீதிகாவை தன் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்புங்கள் என்று கேட்டு மனைவியுடன் அவரது வீட்டுக்கே வந்து கோபால் கண்டா அவரது பெற்றோரிடம் பேசியுள்ளார் என்றும் தெரியவந்தது.
நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படும் என்று அரியானா முதல்வர் பூபீந்தர் சிங் ஹூடா தெரிவித்தார்.
தேசிய மகளிர் கொமிஷன் இதுபற்றி விசாரிக்கும் என்று மத்திய அமைச்சர் கிருஷ்ணா தீரத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கோபால் கண்டாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று இந்திய தேசிய லோக் தளம் தொடர்ந்து கோரி வருகிறது.
கோபால் கண்டா எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. கீதிகாவின் செல்போன் பேச்சுகள், கம்ப்யூட்டரில் அவர் பதிவு செய்து வைத்திருந்த தகவல்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. கீதிகாவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.


|