இந்திய வான் படை சார்பில், குண்டு வீசிதாக்குதல் உள்ளிட்ட போர் ஒத்திகை நிகழ்ச்சி கடந்த பெப்ரவரி மாதம் 22ம் திகதி, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன்சிங், ஜனாபதி பிரணாப் முகர்ஜி, இராணுவ அமைச்சர் அந்தோணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் சந்தேகத்தின் பேரில் ஒருவனை, புலனாய்வுப்பிரிவு பொலிசார் பெப்ரவரி 25ம் திகதி கைது செய்து விசாரித்தனர். அவனது பெயர் சுமர்கான் (வயது 34) எனவும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.உளவாளி என்பதும் தெரிய வந்தது.
அவன் கொடுத்த தகவலின்பேரில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஊழியர் சுரேந்திரா என்பவரிடம், போர் ஒத்திகை தொடர்பான ரகசிய ஆவணங்களை வாங்கியதாகவும் கூறினான்.
இது குறித்து புலனாய்வுத்துறையின் ராஜஸ்தான் பிரிவு இயக்குனர் ஜெனரல் தல்பாத் சிங் திங்கார் கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் 4-வது கிரேடு அலுவலராக பணியாற்றி வந்த, ஜெய்சல்மார் நகரைச் சேர்ந்த சுரேந்திரா என்பவர் மீது கடந்த சில நாட்களாக சந்தேகம் ஏற்பட்டது.
அவரது மின்னஞ்சல்கள், போன் உரையாடல்களை கண்காணித்து வந்த நிலையில் அவர்தான் போர் ஒத்திகை அலுவலக ரகசியங்களை, பாக். உளவாளி சுமர்கானிடம் அளித்துள்ளார். சுரேந்திரா மீது அலுவலக ரகசியங்களை கசியவிட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தோம்.
சுமர்கான், சுரேந்திரா ஆகிய இருவரும் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்றார். |