நாடாளுமன்ற மறுசீரமைப்பிற்கான நேரம் வந்துவிட்டதாக அவர் கூறியுள்ள நிலையில், தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என ஹசாரே தெரிவித்துள்ளார்.
வலிமையான லோக்பால் மசோதா, ஊழல் கறை படிந்த பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை விசாரிக்க சிறப்பு குழு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அன்னா குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
4 நாட்களுக்குப்பிறகு இப்போராட்டத்தில் அன்னா ஹசாரேவும் கலந்து கொண்டார். இந்நிலையில், அன்னா குழுவினரின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. இதற்கு முன் அன்னா குழுவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது, உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட மத்திய அரசு, இம்முறை போராட்டத்தை கண்டுகொள்ளாதது அன்னா குழுவினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, அரசியல் கட்சி ஒன்றை துவக்கும் முடிவில் அன்னா ஹசாரே குழு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற தலைப்பில் இணையதளத்தில் இது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டன. தொடர்ந்து இன்று மாலை 5 மணியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னா குழு முடித்துக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்ற மாலை 5 மணியுடன் அன்னா குழுவினரின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
உண்ணாவிரதப் போராட்ட முடிவில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தற்போதுள்ள சூழலில் பார்லிமென்ட்டை மறுசீரமைப்பு செய்யக்கூடிய நேரம் வந்து விட்டது. இதற்காக அரசியல் கட்சி அமைத்து அன்னா குழு போராடும்.
பொதுமக்களிடம் ஓட்டு வங்கி அரசியலுக்கு எதிராக தங்கள் அமைப்பு செயல்படும். தங்கள் கட்சி செயல் திட்டங்கள் நிச்சயம் ஏ.சி., ரூமில் அமர்ந்து உருவாக்கப்படமாட்டாது. வேட்பாளர்கள் தேர்வு வெளிப்படையாக அமையும் என்று தெரிவித்தார்.
புதிய அரசியல் கட்சி அறிவிப்பை அன்னா குழு வெளியிட்டுள்ள நிலையில், ஒரு போதும் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். |