இந்திய துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் ஹமீத் அன்சாரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிட்டனர்.
இன்று காலை நடந்த வாக்களிப்பில் தலைவர்கள் உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதன் வாக்கு எண்ணிக்கை இன்று மாலை நடந்தது. பதிவான 736 வாக்குகளில் 490 வாக்குகளைப் பெற்று அன்சாரி வெற்றி பெற்றார்.
ஹமீது அன்சாரி
நாட்டின் துணை ஜனாதிபதியாக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அன்சாரி சிறந்த கல்வியாளராக, எழுத்தாளராக பன்முகத் திறமை கொண்டவர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிப்பூர் தான் சொந்த ஊர். ஆனால் இவர் பிறந்தது கொல்கத்தாவில்.
1961ஆம் ஆண்டில் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார்.
அவுஸ்திரேலியாவிற்கான இந்திய தூதர், ஐக்கிய அரபு நாடுகள், ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கான இந்திய தூதர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் அன்சாரி. ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்த பிரதிநிதியாகவும் இருந்தார்.
1984ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். மேலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 2000ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை துணை வேந்தராகப் பணியாற்றினார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியாமில்லா இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கௌரவ பேராசிரியராகவும் பணியாற்றினார். தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவர்.
மேற்காசிய விவகாரங்களில் மிகுந்த ஆர்வமுடைய அன்சாரி, பாலஸ்தீனம் உட்பட பல்வேறு மேற்காசிய நாடுகளின் வெளியுறவு விவகாரங்கள் குறித்துப் புத்தகங்கள் எழுதியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட முன்வரைவு மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது, அதன் மீதான விவாதத்தை நள்ளிரவு வரை நீட்டித்து, பின் வாக்கெடுப்பு நடத்தாமலேயே அவையைக் கால வரையின்றி ஒத்திவைத்தார் அன்சாரி.
இதற்காகத்தான் ஹமீத் அன்சாரியை மீண்டும் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்து இருப்பதாக கூறப்படுவதும் உண்டு.
கடந்த 2007ஆம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலின் போது மொத்தம் 455 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நஜ்மா ஹெப்துல்லாவை விட 233 வாக்குகள் வித்தியாசதில் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்றார்.

|