ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அணி சேரா நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அணி சேரா உறுப்பு நாடுகளின் தலைவர்கள் டெஹ்ரான் வந்துள்ளனர்.
இம்மாநாட்டின் இடையே பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியும் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.
அதாவது தீவிரவாதத்தை ஒழிப்பது, இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தையை தொடர்வது, நல்லுறவை வளர்ப்பது, வர்த்தகத்தை மேம்படுத்துவது உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் கூறுகையில், இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் ஒரு பகுதியாக இரு நாட்டு உள்துறை செயலாளர்கள் மட்டத்தில் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்த இச்சந்திப்பின் போது இரு தலைவர்களும் முடிவு செய்தனர் என்றார்.
மும்பை தீவிரவாத தாக்குதலில் அஜ்மல் கசாப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்பை தீவிரவாத தாக்குல் வழக்கை விரைந்து முடித்து, இதில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று சந்திப்பின் போது பிரதமர் மன்மோகன் சிங் சர்தாரியை வலியுறுத்தினார்.
மேலும் சர்தாரி, மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் வரும்படி மீண்டும் அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட மன்மோகன் சிங், தாம் பாகிஸ்தான் வர விரும்புவதாகவும் சரியான நேரத்தில் அங்கு வருவதாகவும் உறுதியளித்தார் என்று ரஞ்சன் மத்தாய் தெரிவித்தார். |