திபெத்திய பெண்கள் சிலருக்குப் பயிற்சி அளித்து, அவர்கள் மூலமாக எனக்கு விஷம் கொடுத்து கொல்ல சீன ஏஜென்டுகள் முயற்சித்து வருகின்றனர் என திபெத்திய தலைவர் தலாய்லாமா சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று இமாச்சல பிரதேசத்தில் விசா முடிந்து தங்கியிருந்த சீனர்களை அம்மாநில பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இவர்களிடமிருந்து சீன நாட்டு சிம் கார்டுகள், சர்வதேச ஏ.டி.எம் கார்டுகள், இந்தியப் பணம் ரூ.30 லட்சம், 3 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அவர்களில் சிலர் கட்டிடப் பணி செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் அவர்கள், திபெத்திய தலைவர் தலாய்லாமாவை தீர்த்துக்கட்ட வந்திருப்பார்களோ என்று இமாச்சல பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள சீன தூதரக செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த சம்பவம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளிவிவகாரத் துறையிடம் விவரங்கள் கேட்டுள்ளோம் என்றார்.
இந்நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

|