அசாம் மாநிலம் கோக்ரஜாரில் போடா பிரிவினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே வெடித்த கலவரத்தால் 5 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இக்கலவரத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர். 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து 5 நாட்களாக வெடித்த இக்கலவரத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக அசாம் மாநில பொலிஸார், துணை இராணுவம் என இருபிரிவினர் அம்மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று கலவரம் குறைந்திருந்தது. கோக்ரஜார், துப்ரி, போடாலாந்து மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது.
300 கோடி நிவாரண உதவி: நேற்று அசாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களுக்காகவும் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டதாக அறிவித்தார்.
ஏற்கனவே கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கலவரத்தில் வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு ரூ.30 ஆயிரமும் ஒரளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. |